மழைநீர் தேங்கும் பகுதியை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு.

07.12.21:

கோவை நகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் இருந்து தண்ணீரைத் திருப்பிவிடும் சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வல்லுநர் குழுவை அமைக்கவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் அவிநாசி சாலை மேம்பாலம், காளீஸ்வரா மில் சாலை, லங்கா கார்னர், கிக்கானி ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம்,மாநகராட்சி ஆணையர் ராஜகோ பால் சுன்கரா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்தில், ஆணையர் பேசும்போது, “மாநகரில் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்குவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, அடுத்த பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அதிவேக மோட்டார்கள் பொருத்தி மழைநீரை வெளியேற்றுதல், வேறு இடங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிதல் வேண்டும். சூழலுக்கு ஏற்ப எவ்வகையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விரிவான திட்டமிடுதல் வேண்டும்” என்றார்.

கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள் தொழில் துறையினர், கல்லூரி பொறியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து வல்லுநர் குழு அமைத்து உரிய திட்டமிடுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில் மீண்டும் இக்குழுவில் யார், யார் இடம் பெறுவது என்பது குறித்தும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் துணை ஆணையர் மோ.ஷர்மிளா, சூயஸ் திட்ட இயக்குநர் அமிர்த் நியோகி, மாநகராட்சி பொறியாளர்கள் ராமசாமி, பிரபாகர், ஓய்வு பெற்ற கட்டிடக்கலை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தன்னார்வலர்கள், பொறியியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *