74 குடும்பங்களைத் தற்சார்பு நிலைக்கு உயர்த்தும் இனிய நிகழ்வு.

கோவை 26.07.22:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளையின் சார்பாக (26/07/22) 74 குடும்பங்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா’ போத்தனூர் சாலையில் உள்ள ஃபாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவையில் நடத்தி வரும் நான்கு தையல் பயிற்சி மையங்களில் ஆறு மாத மற்றும் தொழில் பயிற்சி பெற்ற ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு சுயதொழில் தொடங்கவும், பெண்கள் தற்சார்பு நிலை மற்றும் முன்னேற்றத்திற்காகவும் 74 தையல் இயந்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.ராபிதத்துல் உலமா பேரவை மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இறைவனைப் புரிந்து கொண்டு அவனை மட்டுமே வணகுவதுடன் இன்னல்படும் மக்களுக்கு கைகொடுத்து உதவுவதையும் இஸ்லாம் கடமையாகவே போதித்துள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே இறை உவப்பை பெற முடியும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் திரு. ரமணன் (கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலர், துணை ஆட்சியர்), திரு. O.A. பாலு (நிர்வாக இயக்குனர், Roots Cast Pvt Ltd), திருமதி ஹேமலதா அண்ணாமலை (Ampere மின்சார வாகனங்கள் உரிமையாளர்), திருமதி அனுஷா ரவி (CEO, பார்க் கல்விக் குழுமங்கள்), ஜனாப். சம்சு அலி (சென்னை மொபைல்ஸ் உரிமையாளர்), நிர்மலா மகளிர் கல்லூரி செயலாளர், டெக்ஸிட்டி கல்லூரி தலைமையாசிரியர், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தலைமை ஆசிரியர், கர்மல் கார்டன் பள்ளியின் தாளாளர் & தலைமையாசிரியர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மகளிர் அணி தலைவி ஜனாபா. கதீஜா காஜா, கோவை மகளிர் அணி தலைவி ஜஹீனா அஹமத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப். அப்துல் ஹக்கீம், அரபா ஸ்டோர்ஸ் குழுமத்தின் உரிமையாளர் ஜனாப். ஹாசிம் ஆகியோர் பயனாளர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வாழ்த்தினர்.

மாவட்ட நிர்வாகத்தினர், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், ஆன்றோர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.நிகழ்வினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை தெற்கு மண்டலத் தலைவர் முனைவர் சையது அபுதாஹிர் ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *